தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Haryana: ’ஹரியானாவில் பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸை ஆதரிக்க ரெடி!’ 10 எம்.எல்.ஏக்களை கொண்ட ஜேஜேபி கட்சி அறிவிப்பு!

Haryana: ’ஹரியானாவில் பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸை ஆதரிக்க ரெடி!’ 10 எம்.எல்.ஏக்களை கொண்ட ஜேஜேபி கட்சி அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
May 08, 2024 05:08 PM IST

”மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு, ஹரியானாவில் பாஜக அரசைக் கவிழ்க்க காங்கிரஸுக்கு உதவ தயாராக இருப்பதாக பாஜக கூட்டணி கட்சியாக இருந்த ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) அறிவித்துள்ளது பாஜகவுக்கு பெரும் தலைவலியாக அமைந்து உள்ளது.”

ஹரியானா அரசுக்கு  எந்த பிரச்னையும் இல்லை என்று ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறி உள்ளார்.
ஹரியானா அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறி உள்ளார். (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தங்கள் ஆதரவை நேற்று வாபஸ் பெற்றுவதாக அறிவித்துள்ள நிலையில் பாஜக அரசு ஆட்டம் கண்டு வருகிறது. 

மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு, ஹரியானாவில் பாஜக அரசைக் கவிழ்க்க காங்கிரஸுக்கு உதவ தயாராக இருப்பதாக பாஜக கூட்டணி கட்சியாக இருந்த ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) அறிவித்துள்ளது பாஜகவுக்கு பெரும் தலைவலியாக அமைந்து உள்ளது. 

இருப்பினும், தனது அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று முதல்வர் நயாப் சிங் சைனி உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.

சுயேச்சை எம்எல்ஏக்கள் சோம்பீர் சங்வான், ரந்தீர் சிங் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகியோர் நேற்றைய தினம் ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவை வாபஸ் பெற்றனர் மற்றும் சைனி அரசாங்கத்தை மைனாரிட்டி அரசு என்று விமர்சித்த அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். மேலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஹரியானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் இன்னும் 15 நாட்களில் வர உள்ளது. மேலும் வரும் அக்டோபர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஹிசாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) தலைவர் துஷ்யந்த் சவுதாலா, சைனி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்றார். மேலும் பா.ஜ.கவுடன் தனது கட்சி மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.  இரு கட்சிகளும் மார்ச் மாதம் கூட்டணி உறவை முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் தற்போது 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கர்னால் மற்றும் ராணியா சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. 

பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்.எல்.ஏக்களும், ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஐஎன்எல்டி மற்றும் ஹரியானா லோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் மொத்தமுள்ள 6 சுயேச்சைகளில் 2 பேர் பாஜக அரசை ஆதரிக்கின்றனர். 

"அரசாங்கம் எந்த பிரச்சனையும் இல்லை, அது வலுவாக செயல்படுகிறது," என்று முதல்வர் சைனி செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.

பாஜக வேட்பாளர் அசோக் தன்வாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக முதல்வர் சிர்சாவுக்கு வந்திருந்தார்.

காங்கிரஸைத் தாக்கிய சைனி, எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் சிலரின் தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார்.

ஆனால் ஹரியானா மக்கள் காங்கிரஸின் திட்டங்களை வெற்றிபெற விடமாட்டார்கள், எதிர்க்கட்சியின் "தவறான செயல்களை" நாடு முழுவதும் பார்க்கிறது என்று முதல்வர் கூறினார்.

"மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாது என்பதும், அவர்களை தவறாக வழிநடத்துவதும் காங்கிரஸுக்கு தெரியும். மாநில அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அது வலுவாக செயல்படுகிறது," என்று  அவர் தெரிவித்தார். 

ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது, அதே நேரத்தில் ஹரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25ஆம் தேதி கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

வெளியேறும் மக்களவையில் குருக்ஷேத்ரா எம்.பி.யான சைனி, இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக உள்ளார், அவர் வெற்றி பெற்றால், சட்டசபையில் கட்சியின் பலம் 41 ஆக உயரும்.

IPL_Entry_Point