தனித்துவமாக ஓங்கி ஒலிக்கும் குரல்.." உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" சீர்காழி கோவிந்தராஜன் நினைவுநாள் இன்று!
Sirkazhi Govindarajan memorial day : தலைமுறை கடந்தும் தனது குரலால் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அற்புத பாடகர் சீர்காழி கோவிந்தராஜன். உடலால் உலகை விட்டு மறைந்தாலும் தனது குரலால் இன்னும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டேயிருப்பார். அவரின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.

சீர்காழியில் சிவ.சிதம்பரம் மற்றும் அவையாம்பாள் ஆகியோரின் மகனாக 1933 ஜனவரி 19ஆம் தேதி பிறந்தார் பாடகர் சீர்காழி கோவிந்த ராஜன். இவரின் ஊரின் பெயரே இவருக்கு அடைமொழியாய் அமைந்தது. சீர்காழி வாணி விலாஸ் பாடசாலையில் தான் இவர் பயின்றார்.
சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்ட இவர் தன் தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத்தில் பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார். அந்த காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர்களான தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களை ஒரு முறை கேட்டால் அப்படியே பாடிவிடுவார்.
இவர் தனது முதல் பாடலை தனது எட்டு வயதில் திரிபுரசுந்தரி கோயிலில் பாடினார். இவர் தனது சிறு வயதிலேயே தியாகராஜ பாகவதர் பாடல்கள், கிட்டப்பா பாடல்கள், பக்தி கீர்த்தனை பாடல்களை ரசித்து ஆர்வத்தோடு பாடி வந்தார். நாடக சபையில் சேர்ந்த இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவரது தந்தை பழனியில் உள்ள தாய்மாமா பி.எல். செட்டியாரிடம் அனுப்பி வைத்தார்.