Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
செந்தில்பாலாஜியின் காவல் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவரது காவல் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய பணத்தை வெளிநாடுகளில் பறிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதய சிகிச்சை வழங்கப்பட்டது.
அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் கடந்த ஆகஸ்ட் 12ஆம்தேதி அன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் இன்று மீண்டும் காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன் அமல்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
டாபிக்ஸ்