EPS Campaign: 'ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தர அதிமுகவே காரணம்!’ அடித்து சொல்லும் ஈபிஎஸ்!
”நம்மை வீழ்த்த திமுக எத்தனையோ அவதாரங்களை எடுத்து வருகிறது. அத்தனை அவதாரத்தையும், உங்கள் துணையோடு தவிடுபிடி ஆக்கி உள்ளோம். அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை அழிக்க ஸ்டாலின் போட்ட திட்டம் அத்தனையும் உங்கள் துணையோடு தூள் தூள் ஆக்கப்பட்டது”

திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். எம்ஜிஆர் என்ற மாமனிதர் சோதனைக்கு மத்தியில் அதிமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அடித்தட்டு மனிதனுக்கு கூட அரசுத்திட்டங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு சோதனைகள் மற்றும் பிரச்னைகளுக்கு மத்தியில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக ஆகினார்கள். அவர் மீது பொய் வழக்குகளை போட்டு வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவித்து இன்பத்தை மக்களுக்கு கொடுத்தார்கள்.
நாட்டிலே பல கட்சிகள், பல தலைவர்கள் இருந்தாலும், நாட்டுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள்தான். அவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. இங்கு அமர்ந்து இருக்கும் நாம் தான் அவர்களின் வாரிசுகள். இந்த மண்ணில் இருபெரும் தலைவர்கள் தோன்றாமல் இருந்தால் ஏழைகள் ஏழைகளாகத்தான் இருந்திருப்பார்கள்.
சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காகவே வாழ்கின்றனர். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் பதவிக்கு வந்து ஆட்சி அதிகாரம் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.