தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாஜகவின் 'B'team திமுக.. தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டதை கைவிடுக - சீமான்!

பாஜகவின் 'B'TEAM திமுக.. தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டதை கைவிடுக - சீமான்!

Divya Sekar HT Tamil

Mar 06, 2023, 03:29 PM IST

அரசு பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அரசு பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அரசு பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் 'திராவிட மாடலா’என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க இந்திய ஒன்றிய பாஜக அரசினைப் போல, அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமான போக்குவரத்துக் கழகம், கடந்த 50 ஆண்டுகளாக 20 ஆயிரம் பேருந்துகளுடன் ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து இயங்கி வருகின்றது. போதிய வருமானம் இல்லாத குக்கிராமங்களிலும், இலாப-நட்டத்தை கணக்கில் கொள்ளாமல் மக்கள் சேவையை மட்டுமே முதன்மையானதாக கொண்டு இயங்கிவரும் அரசுப் பேருந்துகள் கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஆனால், அரை நூற்றாண்டுகாலமாக அடுத்தடுத்து தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் கட்டுக்கடங்காத ஊழல் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நட்டத்தில் இயங்குவதோடு, பணியாளர்களுக்கு உரிய ஊதியம் கூடக் கொடுக்க முடியாத அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

தாங்கமுடியாத கடன்சுமை காரணமாகப் போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க, அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக நிதியமைச்சர், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தபோதே அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்தது.

மோடி தலைமையிலான பாஜக அரசு, வங்கி, காப்பீடு, வானூர்தி, தொடர்வண்டி உள்ளிட்ட அனைத்து மக்கள் சேவை பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. சொந்தமாக ஒரு வானூர்தி கூட இல்லாத நிலையில், குடிமக்களிடம் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து வானூர்தி நிலையங்களை அமைக்கிறது பாஜக அரசு. 

பாஜகவையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, கொடுங்கோன்மை பாஜக அரசு செய்வதைப்போலவே, சென்னை மாநகருக்குட்பட்ட பேருந்துநிலையங்களை பல நூறுகோடிகள் செலவில் நவீன மயமாக்கப்போவதாக அறிவித்துவிட்டு, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கிறது.

மோடி அரசினை அப்படியே பின்பற்றும் திமுகதான், பாஜகவின் உண்மையான 'B' TEAM என்பது மீண்டும் ஒருமுறை இதன் மூலம் உறுதிப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதற்கு பெயர் திராவிட மாடலா? அல்லது ஆரிய மாடலா? என்ற கேள்விக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருக்கும்போது நட்டத்தில் இயங்கும் பொதுநிறுவனங்கள், தனியாரிடம் சென்றவுடன் எப்படி இலாபத்தில் இயங்குகின்றன? அரசால் செய்ய முடியாத ஒன்றைத் தனியார் நிர்வாகம் சிறப்பாகச் செய்கிறது என்றால் பல இலட்சம் கோடி கடனுள்ள அரசையே ஏன் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது? என்ற மக்களின் ஐயம் மிகமிக நியாயமானதே.

ஆகவே, அரசுப் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைத்து, அதில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து, இலாபத்தில் இயங்கச் செய்ய உரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்