NIA raids: பாஜகவின் நடவடிக்கைகள் அப்பட்டமான பழிவாங்கும் போக்கு - சீமான் கண்டனம்
Sep 22, 2022, 08:33 PM IST
தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கும் போக்கு என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான பாஜக அரசின் நடவடிக்கைகள் அப்பட்டமான பழிவாங்கும் போக்கு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தமிழகத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான பாஜக அரசின் நடவடிக்கைகள் அப்பட்டமான பழிவாங்கும் போக்கு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளைக் குறிவைத்து மத்திய அமலாக்கத்துறை, தேசியப்புலனாய்வு முகாமை போன்றவற்றின் மூலம் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாடெங்கிலும் அத்துமீறிய சோதனைகளையும், கைது நடவடிக்கைகளையும் பாய்ச்சி, அவற்றை முடக்க நினைப்பதென்பது கொடும் சனநாயகப் படுகொலையாகும்.
சனநாயகப்பாதையில் இயங்கும் மக்கள் ஆதரவு இயக்கங்களான எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றின் மதவாதத்திற்கெதிரான தொடர் செயல்பாடுகளையும், கருத்துப்பரப்புரைகளையும் தாங்க முடியாது, அதிகாரப்பலம்கொண்டு அவ்வியக்கங்கள் மீது ஏவப்படும் மிகமோசமான அடக்குமுறைகளும், எதேச்சதிகாரப்போக்குகளும் அப்பட்டமான பழிவாங்கும் போக்கேயாகும்.
மதவாத அரசியலையும், பாசிசப்போக்கையும் கட்டவிழ்த்துவிட்டு, நாட்டை மதத்தால் துண்டாட முயலும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் அநீதிச் செயல்பாடுகளுக்கு எதிராக இருப்பதனாலேயே, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் கைதுசெய்யப்படுவதும், அவர்களது இடங்களில் சோதனைகள் நிகழ்த்தப்படுவதுமான சதிச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. அதிகாரத்திமிர் கொண்டு சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, ஒற்றைக்கட்சி ஆட்சி முறையை நோக்கி நகரும் பாஜக அரசின் இச்செயலுக்கு எனது வன்மையானக் கண்டனங்களையும், எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன்." என்று தெரிவித்துள்ளாா்.
டாபிக்ஸ்