Thirumavalavan: ’மதுவிலக்குக்காக ஈபிஎஸ் உடன் இணைந்து போராட தயார்’ திருமாவளவன் பேட்டி
May 16, 2023, 02:01 PM IST
எதிர்க்கட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார் என திருமாவளவன் கேள்வி
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை திறந்திருக்கும்போதே கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
குடியிருப்புகளுக்கு சென்றே விநியோகம் செய்யக்கூடிய நிலை இருந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் சந்தித்து பேசி இழப்பீடு வழங்கி உள்ளார். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கள்ளச்சாராயத்தை காரணம்காட்டி அரசு மதுவணிகத்தை அனுமதிப்பது என்பது ஏற்புடையது அல்ல.
கள்ளச்சாராயம் விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது. படிப்படியாக அமல்படுத்த முடியும் என்றார்.
கடந்த ஆட்சியில் மதுவுக்கு எதிராக கூட்டணி கட்சி போராடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளாரே? என்ற கேள்விக்கு, நாங்கள் கூட்டணி கட்சிதான், நாங்கள் மதுவிலக்கு வேண்டும் என குரல் கொடுக்கிறோமே. எதிர்க்கட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார்.
மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சொல்லி போராட்டம் நடத்துவாறேயானால் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம்.
டாபிக்ஸ்