Cylinder Explosion : சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
Sep 30, 2022, 02:16 PM IST
ஒரகடம் அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் : ஒரகடம் அடுத்த தேவேரியம் பாக்கத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் நேற்று முன்தினம் மாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.
இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் (51), அவரது மகள்கள் சந்தியா (21), பூஜா, நிவேதா, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஆமோத்குமார் (25), குணால், சக்திவேல், அருண், கோகுல், தமிழரசன் உள்பட 12 பேர் உடல் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தியா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதற்கிடையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார். இதனால் கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியான கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், ஊராட்சி தலைவர் அஜய் உள்பட 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.