பாட்டி திட்டியதால் எலி மருந்து சாப்பிட்டு 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
Jul 03, 2022, 03:40 PM IST
சேலத்தில் பாட்டி கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : அழகாபுரம் வசந்தம் நகரில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் மணிமாறன்(17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பெருமாளின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவர் வேறு பெண்ணை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மணிமாறனை, அவரது பாட்டி வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், மணிமாறன் படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி வெளியே சென்று விளையாடி வந்துள்ளார். இதனால் அவரை பாட்டி கண்டித்து படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மணிமாறன், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்