Surat Diamond Bourse: பெண்டகனை விஞ்சிய சூரத் வைர கட்டடம்! மும்பையில் கிளம்பிய எதிர்ப்பு!
சூரத் டயமண்ட் போர்ஸ் கரடுமுரடான மற்றும் பளபளப்பான வைரங்கள் மற்றும் நகைகளை வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாக இருக்கும்.
உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டடமாக அமெரிக்க பாதுகாப்பு துறை அலுவலகமான பெண்டகன் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில், சூரத் டயமண்ட் போர்ஸ் என்ற பெயரில் வைர வியாபாரத்திற்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும். கரடுமுரடான மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் இரண்டையும் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாகவும் இந்த கட்டடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடம் குறித்து ட்வீட் செய்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 80 ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய அலுவலகக் கட்டிடமாக இன்றுவரை செயல்பட்டு வரும் பென்டகனை இப்போது சூரத் டயமண்ட் போர்ஸ் முந்திவிட்டது என தெரிவித்துள்ளார்.
" சூரத் டயமண்ட் போர்ஸ் சூரத்தின் வைரத் தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது. இது இந்தியாவின் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். இது வர்த்தகம், புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான மையமாக விளங்கும், நமது பொருளாதாரத்தை மேலும் உயர்த்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய அலுவலகம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:-
- இறக்குமதி - ஏற்றுமதிக்கான அதிநவீன 'சுங்க அனுமதி இல்லம்', சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதி ஆகியவை இங்கு உள்ளது.
- 3400 கோடி ரூபாய் செலவில் 35.54 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள சூரத் டயமண்ட் போர்ஸ், கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட வைர வர்த்தகத்தின் உலகளாவிய மையமாக மாற உள்ளது.
- டயமண்ட் போர்ஸ் என்பது உலகின் மிகப்பெரிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கட்டிடமாகும். ஏனெனில் இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட 4,500 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அலுவலக கட்டிடம் பென்டகனை விட பெரியது மற்றும் நாட்டின் மிகப்பெரிய சுங்க அனுமதி இல்லமாகும்.
- இந்த கட்டிடத்தில் 175 நாடுகளைச் சேர்ந்த 4,200 வர்த்தகர்கள் தங்கும் வசதி உள்ளது. அவர்கள் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களை வாங்க சூரத்திற்கு வருவார்கள்.
- உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் வைரம் வாங்குபவர்கள் சூரத்தில் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய தளத்தைப் பெறுவதால், சுமார் 1.5 லட்சம் பேர் வர்த்தக வசதி மூலம் வேலை பெறுவார்கள்.
மும்பையில் கிளம்பும் எதிர்ப்பு
மும்பையில் இருந்து வைர வியாபாரத்தை மாற்றும் நடவடிக்கைகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “முன்பு மும்பையின் பந்த்ரா குர்லா வளாகத்தில் வைர வியாபாரம் நடந்து வந்தது. ஆனால் இந்த வணிகம் தற்போது, மும்பையில் இருந்து, குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வைர வியாபாரம் சூரத்துக்கு மாறியதால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்.” என பவார் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்