New Groom Dead: தேனிலவில் புதுமாப்பிள்ளை பலி: குதிரையில் ஏறிய போது சோகம்!
தேனிலவுக்கு சென்ற புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மஹாராஷ்ட்டிரா மாநிலம் நாவி மும்பை, முகமது அலி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம் இம்தியாஸ் ஷேக். 23 வயது நிரம்பிய இவருக்கு அண்மையில்தான் திருமணம் முடிந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் திருமணம் முடித்த கையோடு முகமதுவும், அவரது மனைவியும் கடந்த 25 ஆம் தேதி ராய்கட் பகுதிக்கு தேனிலவு சென்றுள்ளனர். அவருடன் இரண்டு நண்பர்களும் சென்றிருக்கிறார்கள். அங்குள்ள மலைவாசஸ்தலத்தில் குதிரை சவாரி மிகவும் பிரபலம் என்பதால், அவர்கள் அனைவரும் தனித்தனியாக குதிரையில் சவாரி செய்து கொண்டே மலையின் அழகை ரசித்துக்கொண்டு வந்ததாக தெரிகிறது.
அப்போது முகமது சென்ற குதிரையானது திடீரென்று வேகமாக ஓடியுள்ளது; இதனை சற்றும் எதிர்பாராத அவர் நிலை தடுமாறி குதிரையிலிருந்து கீழே விழுந்தார்; இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; உடனடியாக அவர் மாதேரானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். தேன்நிலவு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை குதிரையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து உல்லாஸ் நகர்போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இங்கு இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும், குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற விதி பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்றும் போலீஸ் அதிகாரி சேகர் லாவே தெரிவித்தார்.இதை பின்பற்றாத சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரை வீரர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
டாபிக்ஸ்