HT MP Story: ’வெற்றி கனியை பறிப்பாரா சௌமியா அன்புமணி! முந்தும் திமுக!’ தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்!
”1997இல் வாழப்பாடி ராமமூர்த்தி, 1984இல் தம்பிதுரை, 1991இல் தங்கபாலு, 2014இல் அன்புமணி ராமதாஸ், 2019இல் செந்தில் குமார் உள்ளிட்டோர் தருமபுரி தொகுதியில் வென்ற முக்கிய வேட்பாளர்கள் ஆவார்”

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்தோம். அந்த வரிசையில் HT MP Story என்ற தொடர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்களின் பின்னணி குறித்து அலசுவோம்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி!
2009 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் பாலக்கோடு, பென்னாகாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக தருமபுரி மக்களவைத் தொகுதி உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர், அரூர், மொரப்பூர், தர்மபுரி, மொரப்பூர், பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டம்ன்றத் தொகுதிகளை கொண்டு இருந்தது.
அதிக முறை வென்ற கட்சிகள்!
பாட்டாளி மக்கள் கட்சி 4 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்று உள்ளனர்.
கவனம் பெற்ற நட்சத்திர எம்.பிக்கள்!
1997இல் வாழப்பாடி ராமமூர்த்தி, 1984இல் தம்பிதுரை, 1991இல் தங்கபாலு, 2014இல் அன்புமணி ராமதாஸ், 2019இல் செந்தில் குமார் உள்ளிட்டோர் தருமபுரி தொகுதியில் வென்ற முக்கிய வேட்பாளர்கள் ஆவார்.
அமோக வெற்றி பெற்ற செந்தில் குமார்
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.வி.என்.செந்தில் குமார் 574,988 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகளையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 53,655 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ருக்மணி தேவி 19,674 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜசேகர் 15,614 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.
தற்போது யார்?
தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் அ.மணி வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆர்.அசோகன், பாமக சார்பில் சௌமியா அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா பொன்னிவளவன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
களம் யாருக்கு பலம்?
மோடி அரசின் மீதான 10 ஆண்டுகால அதிருப்தி வாக்குகள், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், திமுக கூட்டணி பலம் உள்ளிட்டவை திமுகவுக்கு வலு சேர்க்கலாம்.
திமுக அரசின் மீதான அதிருப்தி, கட்சி கட்டமைப்பு உள்ளிட்டவை அதிமுகவுக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது.
பாமகவின் சொந்த செல்வாக்கு, மோடி அரசை ஆதரிப்போர் உள்ளிட்டோரின் வாக்குகள் சௌமியா அன்புமணிக்கு பலம் தருவதாக உள்ளது.
திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்று எதிர்பார்ப்போர் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது.
