Rahul Gandhi:ராகுல் காந்தி பதவி பறிப்பு! வழக்கை கவனித்து வருகிறோம்-அமெரிக்கா
Mar 28, 2023, 10:08 AM IST
Rahul Gandhi:- இந்திய நீதிமன்றத்தில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி ராகுல் காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 24ஆம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேவேளையில், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமீனும் வழங்கியது.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும் ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.
இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது எந்த ஜனநாயகத்திற்கும் அடிப்படை. இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்.
கருத்து சுதந்திரம் உட்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பகிர்கிறோம் என்றார்.