Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Apr 29, 2024, 12:17 PM IST
Senthil Balaji Case, Supreme Court: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் மனுத்தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை சார்பில் இன்று (ஏப்ரல் 29) பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 320 நாட்களுக்கு மேலாக மனுதாரர் சிறையில் உள்ளார் என்றும் தனி நபர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை நிறுவனம் தொடர்புடைய மோசடியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு கடந்த 25 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 35-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்