PM Modi Resigns: ’பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி!’ அமைச்சரவையை கலைக்க ஜனாதிபதியிடம் கடிதம் அளித்தார்!
Updated Jun 05, 2024 02:17 PM IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்து உள்ளார். இது குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மோடி அளித்துள்ளார். அதில் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தையும் அளித்துள்ளார்.
இந்த சந்திப்பில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
யாருக்கும் பெரும்பான்மை இல்லை?
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. நேற்றைய (ஜூன் 04) தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைகாத சூழல் உருவாகி உள்ளது.
இனி என்ன செய்வார் குடியரசுத் தலைவர்?
18ஆவது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையம் அளிக்கும். அதன் பிறகுதான் அந்த பட்டியலை குடியரசு தலைவர் அரசாணையாக வெளியிடுவார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்
இன்று மாலை நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தனக்கு இருக்கும் எம்.பிக்களின் ஆதரவு கடிதத்தை பிரதமர் மோடி குடியரசுத் தலைவரிடம் அளிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு டிமாண்ட்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், வரும் ஜூன் 8ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி கூட்டம்
இந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகள் உடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்றால் என்ன செய்வார் ஜனாதிபதி?
எந்த கட்சிகளின் தரப்பில் இருந்தும் யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை எனில், தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை பாஜக அரசு நிரூபிக்க வேண்டும்.
யார் யார் எத்தனை தொகுதிகளில் வெற்றி?
240 தொகுதிகளில் வென்று பாஜக தனி பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், சமாவாதி கட்சி 37 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.
உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சி 7 இடங்களிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி 4 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதள் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி 3 இடங்களிலும், ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், சிபிஐ.எல்.எல் கட்சி 2 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும், சிபிஐ கட்சி 2 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தள் கட்சி 2 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இணைந்து 18 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.