மணிப்பூர் நிலச்சரிவு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!
Jul 03, 2022, 09:10 AM IST
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இம்பால்: மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று 3ஆவது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் மாயமான 28 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
முன்னதாக, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.
டாபிக்ஸ்