தேசிய கொடியேற்றத்தின் போது மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
Aug 15, 2022, 08:23 PM IST
கர்நாடக மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய போது முன்னாள் ராணுவ வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
பெங்களூரு: நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், சுதந்திர தின கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தேசிய கொடியேற்றிய போது முன்னாள் ராணுவ வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடபா தாலுகா குட்ருபாடி கிராம பஞ்சாயத்து சார்பாக இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர் கங்காதர கவுடா உள்பட அப்பகுதி கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கருணாகரா கொடி ஏற்றுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த கங்காதர கவுடா திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனையில் கவுடாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்