Margabandeeswarar: அறிவை அள்ளிக் கொடுக்கும் மார்க்கபந்தீஸ்வரர்!
Mar 22, 2023, 06:00 PM IST
கேள்வி ஞானத்தை வளர்க்கும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
சேலம் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள சிவத்தலம் விரிஞ்சிபுரம். இந்த திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இதற்கு திருவிருஞ்சிபுரம், கரபுரம் எனப் பெயர்கள் உண்டு.
சமீபத்திய புகைப்படம்
தலத்தின் சிறப்புகள்
தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இதில் மூலவராக மார்க்கபந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். இறைவியாக மரகதாம்பிகையும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த திருக்கோயிலின் தலவிருட்சம் பனைமரம், தீர்த்தம் சிம்ம தீர்த்தம் ஆகும். பிரம்மன் மனிதனாகப் பிறந்து இங்கு இறைவனிடம் உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பிரம்ம உபதேசம் பெற்ற தலம்
பிரம்மதேவர் மனிதனாகப் பிறந்து சிவசர்மன் என்ற பெயரில் இங்கே வளர்ந்தார். தனது ஊழ்வினை தவற்றை உணர்ந்து இறைவனின் முடிவைக் காண இயலவில்லை என்று வேண்டினார். அதன் காரணமாகத் தனது முடியை இறைவன் சாய்த்துக் கொடுத்தார். இறைவனின் முடியைக் காண நினைத்த பிரம்மன் மனிதனாகப் பிறப்பெடுத்து அவரது முடியை இந்த திருத்தலத்தில் கண்டார். அதேசமயம் பிரம்மனுக்கு இறைவன் நேரடியாக உபதேசமும் கொடுத்தார்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கினால் கல்வி மற்றும் கேள்வி ஞானத்தில் சிறந்து விளங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த திருக்கோயிலில் நான்கு வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 64 கலைகளையும் பிரம்மதேவன் கற்று இருந்தார். சிவ தீட்சை பெறுவதை விட இந்த உலகத்தில் பெரும் பேறு எதுவும் கிடையாது என ஆன்மீகம் கூறுகிறது. பிரம்மதேவன் இந்த திருத்தலத்தில் தான் தீட்சை பெற்றார் என கூறப்படுகிறது.
வழித்துணையாக வந்த சிவபெருமான்
மைசூரைச் சேர்ந்த வணிகர் ஒருவர் காஞ்சிக்குச் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். அவ்வாறு விற்பனை செய்வதற்காகச் சென்ற வணிகர் இந்த தலத்தில் இரவு தங்க நேர்ந்தது. தன்னுடன் வழித் துணையாக வர வேண்டும் என அந்த வணிகர் இறைவனிடம் வேண்டி உள்ளார். காட்டுப்பகுதி பாதியாக இருந்த காரணத்தினால் வேடன் வடிவில் சிவபெருமான் மனிதருக்கு வழித் துணையாக வந்து அவரை காத்தார். எந்த சிக்கலும் இல்லாமல் சென்ற வணிகர் மூன்று மிளகுப் பொதிகளை விற்ற பணத்தைச் சிவபெருமானுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்.
சிறப்பு
108 சிவலிங்கங்கள் செதுக்கப்பட்ட ஒரே லிங்கம் இந்த திருக்கோயிலில் அமைந்துள்ளது. 1008 லிங்கங்கள் செதுக்கப்பட்ட ஒரே லிங்கமும் இந்த கோயிலில் உள்ளது. இந்த லிங்கங்களை வணங்கினால் 108 மற்றும் 1008 சிவலிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
செல்லும் வழி
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவளை என்ற இடத்தில் இறங்கி வடக்கு நோக்கி ஒரு கிலோமீட்டர் சென்றால் இந்த கோயிலை அடையலாம்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல நகரப் பேருந்துகள் இந்த தளத்திற்கு நேரடியாகச் செல்கின்றன. தற்போது நகரப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே அங்கு இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
டாபிக்ஸ்