தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk : ஓபிஎஸ் உள்ளிட்ட4பேரின் மனு தள்ளுபடி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

ADMK : ஓபிஎஸ் உள்ளிட்ட4பேரின் மனு தள்ளுபடி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 25, 2023 11:04 AM IST

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை உருவாகி உள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை என்ற நிலை உருவாகி உள்ளது

ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து கட்சியை வழிநடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பேச்சு எழுந்தது. இதனிடையே கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை வேண்டுமென்ற முழக்கம் அதிமுகவில் வலுப்பெற்றது. பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்வாக விரும்பினர். இதுதொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிரச்னை உண்டான நிலையில், பொதுக்குழுவுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி மீண்டும் கூடியது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கப்படுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். எனினும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து தங்களை நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்தனர். நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு விசாரித்த இவ்வழக்கில் மொத்தமாக ஏழு நாட்கள் வாதம் நடைபெற்றது. அத்துடன், இரண்டு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு நாளை காலை தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது. இப்போது தடைவிதித்தால் கட்சி செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக எந்த தடையும் விதிக்க முடியாது. ஆகையால் ஓ.பன்னீர் செல்வமும், மற்றவர்களும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்