February 14: இது புதுசு.. 'பிப்.14 Cow Hug Day’-விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு
பசுவை கட்டி அணைத்துக் கொள்ளும் தினமாக பிப்ரவரி 14ஆம் தேதியை கொண்டாட வேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் ஆகும். அன்றை நாள் காதலர்கள் ஜோடியாக திரைப்படங்களுக்கும், பார்க்குகளுக்கும், கடற்கரைக்கும் செல்வது வழக்கம். காதலை தெரிவிக்கும் தினமாக மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த காதலர் தினம், இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற சில நாடுகளில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. "அது மேற்கத்திய கலாசாரம். நமது தேசத்திற்கு ஒத்து வராது" என்றெல்லாம் கலாசார ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பசுவை கட்டி அணைத்துக் கொள்ளும் தினமாக பிப்ரவரி 14ஆம் தேதியை கொண்டாட வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் செயலர் எஸ்.கே.தத்தா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கலாசாரத்தின் முதுகெலும்பாக பசு திகழ்கிறது. கிராமப்புறப் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துதல் மற்றும் கால்நடை வளம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பசு பிரதிபலிக்கிறது. தாயைப் போல ஊட்டமளிக்கும் பாலை தருவதால் பசுவை காமதேனு என்றும் கோமாதா என்றும் அழைக்கிறோம். மனிதகுலத்திற்கு செல்வத்தை வழங்கும் பசு எனவும் வணங்குகிறோம்.
காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தின் முன்னேற்றம் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய நாகரீகம், திகைப்பூட்டும் வகையில் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கிட்டத்தட்ட மறக்கடித்துவிட்டது.
பசுவை கட்டித் தழுவும் தினமாக பிப்ரவரி 14 ஆம் தேதியை அறிவிக்க, தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடனும் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரிலும் வெளியிடப்படுகிறது என்று தத்தா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வடமாநிலங்களில் பால் மூலம் வருவாய் ஈட்டும் பலர் தாங்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.