HBD Charles Dickens: காத்துக் கிடந்த வாசகர்கள்..தன் எழுத்துக்களால் வாழும் 'இலக்கிய ஜாம்பவான்' சார்லஸ் டிக்கன்ஸ்!
உலகில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவருமான சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) பிறந்த தினம் இன்று (பிப்.07). இந்த சிறப்பு நாளில் அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

இங்கிலாந்து நாட்டின் ப்ளூம்ஸ்பரி நகரில் 1812 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி ஜான் மற்றும் எலிசபெத் டிக்கன்ஸ் தம்பதிக்கு மகனாக பிறந்தார் சார்லஸ் டிக்கன்ஸ். இவரது தந்தை கப்பலில் எழுத்தராகப் பணியாற்றினார். மிகவும் ஏழ்மையான குடும்பம். சார்லஸ் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள்.
படிப்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட சார்லஸ் 4 வயதிலேயே அம்மாவிடம் புத்தகங்கள் படிக்கக் கற்றுக்கொண்டார். கையில் எது கிடைத்தாலும் படிப்பார். புத்தகம் வைத்திருக்கும் யாரைப் பார்த்தாலும், அவர்களிடம் இருந்து அந்த புத்தகத்தை எப்படியாவது வாங்கி படித்துவிடுவார். இவ்வாறு அவரது குழந்தை பருவம் நகரும் போது, வரவுக்கு மீறி செலவு செய்த தந்தை, கடனாளியாகி சிறை செல்ல நேர்ந்தது. அப்போது சார்லஸுக்கு வயது 12.
குடும்பம் வறுமையில் சிக்கியது. இவர் ஆர்வத்தோடு படித்த நூல்கள் மட்டுமல்லாது, இவரது படுக்கையைக்கூட விற்று சாப்பிடும் நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டது. புத்தகங்கள் படிப்பதில் திறமையை வளர்த்துக்கொண்டாலும், குடும்பச் சூழ்நிலையால் தொடர்ந்து படிக்க முடியாமல் போக சிறு வயதிலேயே காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார் சார்லஸ். அந்த தொழிற்சாலையில், தான் சந்தித்த இன்னல்கள், பலவிதமான மனிதர்களின் விரக்தி குறித்து தினமும் இரவில் குட்டி டைரியில் எழுதி வந்தார்.