Rajinikanth: கமல்ஹாசன் தப்பா எடுத்துக்ககூடாது! நான் கலாட்டா பன்னல, எலெக்ஷன் டைம்னால மூச்சு விடவே பயம்தான் - ரஜினி கலகல
மீடியாவ பார்த்தாலே பயமா இருக்கு. எலெக்ஷன் டைமா இருக்கறதால மூச்சு விடவே பயமாதான் இருக்கு. கமல்ஹாசன கலட்டா பன்னேன்னு எழுதிறாதீங்கன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற காவேரி மருத்துவமனையின் புதிய கிளை திறப்புவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியதாவது:
ட்ரெண்டிங் செய்திகள்
"25 வருஷமாக எந்தவொரு திறப்பு விழாவுக்கும் போறதில்லை. எந்த காலேஜ், கட்டிடம் ஓபன் பன்னிட்டா இதுல ரஜினிகாந்த் பார்டனராக இருக்கிறார், அவருக்கு ஷேர் இருக்குன்னு சொல்வாங்க. அதுமட்டுமில்லாமல் ஒரு விழாவுக்கு போன அடுத்தடுத்து கூப்பிடுவாங்க. இதனாலேயே தவிர்ப்பேன்.
ஆனால் மருத்துவமனை பற்றியும், டாக்டர்கள், நர்சுகள் பற்றியும் ரஜினிகாந்துக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்று தான் என்னை அழைத்ததாக சொன்னார். அது நூற்றுக்கு நூறு உண்மைதான்.
ஏன்னா என உடம்பு இஸபெல்லா, விஜயா, காவேரி, அப்போலோ, ராமச்சந்திரா, சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனை வரை போய் வந்துள்ளது. அதனால் மருத்துவமனை, அட்வான்ஸ் தொழில்நுட்பம், மருத்துவர்கள், நர்ஸ்களின் உதவியினால் தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.
ராசியான வீடு
இந்த இடத்தை பார்க்கையில் பழைய நினைவுகள் வருகிறது. சுமார் 45 ஆண்டுகள் முன்னாடி இந்த இடத்தில் தான் அவுட்டோர் ஷுட்டிங் முடித்த பிறகு சில Patch up காட்சிகளை படமாக்குவோம். அதன் பிறகு சம்சாரம் அது மின்சாரம் படத்துக்காக வீடு ஒன்றை நிஜமாக கட்டி, தெருக்கள் அமைத்து செட் போட்டார்கள். அந்த படத்தை இயக்கி, நடித்திருந்தார் அமரர் விசு.
படம் சூப்பர் ஹிட்டாக 200 மடங்கு லாபத்தை ஈட்டியது. அதன் பிறகு அந்த வீடு ராசியான வீடாக விட்டது. அந்த வீட்டில் ஒன்று அல்லது இரண்டு சீன்கள் படமாக்கினால் படம் ஹிட்டாகிவிடும். இந்த செண்டிமென்ட காரணமாக நான் நடித்த சில படங்களின் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டிருக்கிறது. இப்போ இந்த ராசியான இடத்துல இந்த மருத்துவமனை திறந்திருப்பதால் பெயரும், புகழம் பெறும் என நம்புகிறேன்.
ஒரு மருத்துவமனைக்கு நோயாளியாகவோ அல்லது நோயாளியை பார்ப்பதற்கோ போவோம். நான் நோயாளியாக காவேரி மருத்துவமனையில் ஆல்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முக்கிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்.
ஆபரேஷன் போவதற்கு முன்னாள் சர்ஜரி செய்ய இருந்த மருத்துவர் 99 சதவீதம் குணமாகி விடுவீர்கள், ஒரு சதவீதம் வாய்ப்பு குறைவு என்றார். அவர் சொன்ன அந்த ஒரு சதவீதம் மட்டும்தான் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.
அருமையான பங்களா, பர்னிச்சர், கிரைனட் எல்லாம் இருக்கு, அப்படியே ஒரு நாகப்பாம்பும் இருக்கு பார்த்துக்கோங்கான்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. ஆபரேஷன் முடிஞ்ச பிறகு என்னிடம் சக்ஸஸ் என்றார்கள்.மருத்துவமனையில் இருந்த 15 நாள்கள் மிகவும் பாஸிடிவாக இருந்தேன்.
மனிதனுக்கு தேவையான நான்கு முக்கிய விஷயங்கள்
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கிய விஷயமாக ஒழுக்கம் உள்ளது. இது இல்லாதவர் யாரும் முன்னேற முடியாது. இதற்கு அடுத்து இரண்டாவது விஷயமாக நாணயம். இது இருந்தால் பொய், பித்தலாட்டம் இருக்காது.
மூன்றாவதாக அர்பணிப்பு, கடின உழைப்பு. இந்த நான்கு விஷயங்கள் இருக்கும் யாராக இருந்தாலும் கவனிக்கப்படுவார்கள். வாழ்க்கையிலும் முன்னேறுவார்கள். இவை அனைத்து காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் உள்ளது.
கமல்ஹாசனை கலாட்டா செய்யவில்லை
ஆல்வார்பேட்டை காவேரி மருத்துவமனை விரிவாக்கம் செய்ய சில பகுதிகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். முதலில் காவேரி மருத்துவமனை எங்கிருக்கிறது என்று கேட்டால் கமல்ஹாசன் வீட்டுக்கு அருகே உள்ளது என்பார்கள்.
ஆனால் இப்போது கமல்ஹாசன் வீடு, காவேரி மருத்துவமனை பக்கத்தில் இருக்கிறது என்கிறார்கள். இதை கமல்ஹாசன் தப்பா எடுத்துக்ககூடாது. மீடியாக்களே இது சும்மா சொல்றதுதான். கமல்ஹாசனை கலாட்டா பண்ணிட்டார்னு எழுதிடாதிங்க.
இங்க வந்ததும் இத்தனை கேமரா பார்த்ததும் பயமாகிறுச்சு. எலெக்ஷன் டைம்னால மூச்சு விடவே பயமா இருக்கிறது.
சென்னை இந்தியாவின் மெடிக்கல் தலைநகரமாக இருக்கிறது சந்தோஷமாக உள்ளது. இது தமிழர்களுக்கு மிகவும் பெருமையான விஷயம்.
எப்படி அரசியல்ல ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாற்றங்கள் நிகழ்கிறதோ அதுபோல், மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.இதை பார்க்கையில் Think Globally Act Locally என்று சொல்வது நினைவுக்கு வருகிறது.
நான் ஒரேயொரு விஷயம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இப்போது மருத்து செலவுகள் என்பது அதிகமாகவிட்டது. பணக்காரர்கள் மட்டும் செய்து கொள்ளும் விஷயமாக உள்ளது. வசதி இல்லாதவர்களுக்கு செய்து கொள்ளும் விதமாக நன்கொடை போன்றவற்றை செய்வதன் மூலம் அவர்களும் பயன் அடைவார்கள், உங்களுக்கும் புண்ணியம் வந்து சேரும்"
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள், நடிகைகளில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு தமிழ், ஆந்திரா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது கேரளாவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் மத்தியிலம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்