தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Election Spl: வாகை சூடப்போவது யார்?..முந்தும் வேட்பாளர் யார்? - திருநெல்வேலி மக்களவை தொகுதி கள நிலவரம்!

HT Election SPL: வாகை சூடப்போவது யார்?..முந்தும் வேட்பாளர் யார்? - திருநெல்வேலி மக்களவை தொகுதி கள நிலவரம்!

Karthikeyan S HT Tamil
Mar 30, 2024 07:23 AM IST

Tirunelveli Lok Sabha constituency: மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம்.

நயினார் நாகேந்திரன், ராணி, ராபர்ட் ப்ரூஸ்,
நயினார் நாகேந்திரன், ராணி, ராபர்ட் ப்ரூஸ்,

ட்ரெண்டிங் செய்திகள்

நான்கு முனை போட்டி

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வரும் 19 ஆம் தேதியன்று வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தமிழகத்தை பொருத்தவரை பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி

வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஓடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருநெல்வேலி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சுருக்கமாக நெல்லை என அழைக்கப்படும் இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில், அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2019 நாடாளுமன்றத் தேர்தல்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் ஞான திரவியம் வெற்றி பெற்றார். ஞான திரவியம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 623 வாக்குகளையும், அவருக்கு அடுத்த படியாக அதிமுகவின் மனோஜ் பாண்டியன் 3 லட்சத்து 37 ஆயிரத்து 166 வாக்குகளையும் பெற்றனர். அமமுகவின் மைக்கேல் ராயப்பன் 62209 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சத்யா களமிறங்கி உள்ளார்.

வாகை சூடப்போவது யார்?

நெல்லை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராபர்ட் புரூஸ் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது கட்சியினரிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜான்சி ராணி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், திசையன்விளை பேரூராட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னாள் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகவும் இருந்துள்ளார். 

நெல்லைத் தொகுதியைப் பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் தெரிந்த முகமாகத் திகழ்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான தொகுதியும் அதனுள் வருகிறது. மேலும் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு திட்டத்தால் சமூகரீதியிலான வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் எந்தக் கூட்டணியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் களமிறங்கினாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளே இம்முறை வெற்றியை முடிவு செய்யும் என்பதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel