Actor Sivakumar: ’விசிக வேட்பாளருக்கு வெளிப்படை ஆதரவு!’ நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் அதிரடி முடிவு!
”ஜெய்பீம் திரைப்படம் வெளிவந்தபோது வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததாக கூறி நடிகர் சூர்யாவை கண்டித்து பாமக கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், சூர்யாவை கண்டித்து போராட்டங்களையும் பாமகவினர் நடத்தி இருந்தனர்”
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு, நடிகர் சிவக்குமார் வெளிப்படையான ஆதரவு தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
திமுக-விசிக கூட்டணி
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இது மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும், திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில், பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்து பரப்புரை மேற்கொண்டு உள்ளார். ஆனால் பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நீதிமன்றத்தை நாடி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் தந்தையும், மூத்த நடிகருமான சிவக்குமார் தனக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளதாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமார் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர்பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், "தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்" என நடிகர் சிவக்குமார் வாழ்த்தியதாக கூறி உள்ளார் என பதிவிட்டுள்ளார்.
நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும், நீட் நுழைவுத் தேர்வு பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் போது மக்களுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் குரல் கொடுத்து வந்தனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் வெளிவந்தபோது வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததாக கூறி நடிகர் சூர்யாவை கண்டித்து பாமக கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், சூர்யாவை கண்டித்து போராட்டங்களையும் பாமகவினர் நடத்தி இருந்தனர். மேலும் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தின் செயல்பாடுகளை இணையதளங்களில் பாமகவினர் விமர்சனங்களை முன் வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு நடிகர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.