தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Manipur Violence: மெய்தி சமூகத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்து! பற்றி எரியும் மணிப்பூர்

Manipur Violence: மெய்தி சமூகத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்து! பற்றி எரியும் மணிப்பூர்

May 05, 2023, 12:18 AM IST

  • மெய்தி சமூகம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. அந்த மாநிலத்தில் அதிகமாக பெரும்பான்மையாக இருந்து வரும் மெய்தி சமூகத்தினர் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவில் சேர்க்க மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வன்முறை வெடித்தது. இந்திய குத்துசண்டை வீராங்கனையான மேரி கோம் இந்த விவகார்த்தில் மாநில, ஒன்றிய அரசுகள் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மாநிலம் முழுவதும் வன்முறை பற்றியிருக்கும் நிலையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் போலீசார் இணைந்து சுமார் 7,500க்கும் மேற்பட்ட பொதுமக்களை வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றியுள்ளனர். முன்னதாக இந்த விவகாரத்தில் பழங்குடியின மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் இந்த வன்முறை வெடித்துள்ளது. நாங்கள் இருக்கிறோம், யாரும் கவலைப்பட வேண்டாம் என மணிப்பூர் மக்களுக்கு இந்திய ராணுவத்தினர் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். மணிப்பூரில் உள்ள மக்கள் தொகையில் 53 சதவீதத்தினர் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். ஆனால் அவர்கள் மாநில நிலப்பரப்புகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். 50 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட பழங்குடியினர் மணிப்பூரில் 90 சதவீதம் வரை வசித்து வருகிறார்கள். மியான்மர், வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களின் சட்டவிரோத இடப்பெயர்வு காரணமாக மெய்தி இன மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாகக் கூறி தங்களுக்கு பழங்குடியினர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க கோரிக்கை முன் வைத்துள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பழங்குடியினத்தை சேர்ந்த சில பிரிவுகள், பழங்குடியனருக்கான நலனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3ஆம் தேதி அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் மெய்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் வன்முறை வெடித்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங்கிடம் பேசியதோடு, வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.