Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?
Published Oct 02, 2024 06:44 AM IST

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தான் பதவியேற்றது முதல் பள்ளிக்கல்வித்துறைக்கு கீழ் வரும் பள்ளிகளில் அடிக்ககடி திடீர் ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீர் ஆய்வை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாக சென்று அங்குள்ள பள்ளிகள், நூலகங்களில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், 206-வது தொகுதியாக காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள வாலஜாபாத், உத்திரமேரூர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று (அக்டோபர் 01) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அமைச்சர் வழங்கினார். ஆய்வுகளை முடித்த பிறகு அன்பில் மகேஷ் காரில் சென்னை நோக்கி திரும்பினார்.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேசுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையில் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னதாக சிகிச்சையில் உள்ள அவரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு நலம் விசாரித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்