Pen Monument: நீங்கப் சிலை வெச்சா நான் உடைப்பேன் - சீமான்!
Jan 31, 2023, 02:16 PM IST
நீங்கள் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை வைத்தால் நான் கட்டாயம் இடிப்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிராமத்திற்கு உட்பட்ட மெரினா கடற்கரை அருகே உள்ள வங்காள விரிகுடா கடற்பரப்பினுள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாகப் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்துக்கணிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
மெரினா கடலில் இந்த நினைவுச் சின்னமானது 42 மீட்டர் உயரத்தில், ரூபாய் 81 கோடி செலவில் அமைக்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக நிலப்பரப்புக்கு மேல் 290 மீட்டர், கடல் பிறப்புக்கு மேல் 360 மீட்டர் பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கருத்துக் கேட்டு கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய திருவல்லிக்கேணி கல்யாணராமன்," பேனா நினைவுச் சின்னமானது வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். கார்கில் நினைவுச் சின்னம் போல் வருங்கால தலைமுறையினர் கருணாநிதி பற்றி அறிந்து கொள்ள இந்த பேனா நினைவுச் சின்னம் தேவை" எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் கொந்தளித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்," நினைவுச் சின்னம் வைப்பதே நாங்கள் ஏற்கிறோம். ஆனால் கடலுக்குள் வைப்பதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். கடலுக்குள் வைப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். அதனை பார்வேடுவதற்காக செல்லும் பொதுமக்கள் அங்கே பிளாஸ்டிக் குப்பைகளைக் கடலுக்குள் போடுவார்கள். இதனால் கடலில் மாசுபாடு ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எது கேட்டாலும் நிதி இல்லை என்று கூறுகின்றனர் ஆனால் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மட்டும் இவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்று தெரியவில்லை. இந்த நினைவுச் சின்னத்தைக் கடலுக்குள் தான் வைப்போம் என இவர்கள் அடம்பிடிக்கக் காரணம் என்ன? வேறு ஏதேனும் மாற்று இடத்தில் வைக்கலாமே?, உங்களுக்கு எதுகுறித்தும் அக்கறை கிடையாது. நீங்கக் கடலுக்குள்ள அந்த நினைவுச் சின்னத்தை வையுங்க அதை ஒருநாள் கண்டிப்பாக நான் இடிப்பேன்.
பேனா வைக்க மட்டும் உங்களுக்குப் பணம் இருக்கிறது, ஆசிரியர்களை நியமிக்கப் பணம் இல்லையா?, கோடி பணம் செலவு செய்து வைக்கப்படும் பேனா சிலையால் என்ன பயன்?. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் பிள்ளைகளுக்கு உடனடியாக பணிகளை நியமிக்கும் வேலையைச் செய்யுங்கள்" எனக் கடுமையாகப் பேசினார்.