’யாரும் எதையும் செய்யப் போவதில்லை’ -நீதிபதிகள் வருத்தம்
Mar 17, 2023, 04:25 PM IST
நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்," புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் இறையூர் பஞ்சாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பத்தாயிரம் லிட்டர் அளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டது.
அதனை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அங்கே இப்போதும் இரட்டை குவளை முறை பழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் தீண்டாமை கொடுமைகள் இருந்து வந்துள்ளன.
இந்த நீர்த்தற்கு தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சிபிசிஐடி காவல்துறையினருக்கு வழக்கு மாற்றப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்," தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது சம்பந்தப்பட்ட அலுவலர்களே தற்போது ஓய்வு பெற்று சென்று விட்டனர்.
எந்த அமைப்புகளுக்கு விசாரணையை மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மக்களும் காலப்போக்கில் எந்த சம்பவமாக இருந்தாலும் மறந்து விடுகின்றனர். ஒருவேளை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் அவர்கள் தங்களிடம் தேவையான மனித வளம் இல்லை எனக் கூறுவார்கள்.
ஆனால் தமிழ்நாடு காவல்துறையினரிடம் தேவையான மனித வளம் உள்ளது. குறிப்பாக கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வால் மட்டுமே இது போன்ற மோசமான சம்பவங்களை தடுக்க இயலும். இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த விசாரணை மார்ச் 30ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
டாபிக்ஸ்