Admk Case :உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதி முடிவு கிடையாது - ஜெயக்குமார்!
Aug 17, 2022, 12:54 PM IST
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அதில், “ கட்சியின் சட்டதிட்ட விதிகளின் படி தான் பொதுக்குழு கூட்டப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்படி தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் தரப்பிற்கு கிடைத்துள்ள வெற்றி நிரந்தரமான வெற்றி அல்ல. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதி முடிவு கிடையாது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினார்.