Aavin: ‘பச்சைக் குழந்தைகள் குடிக்க பால் இல்லாத நிலை’ ஆர்.பி.உதயக்குமார் காட்டம்!
Mar 17, 2023, 10:21 AM IST
R.B.Udhayakumar: தாய்ப்பாலுக்கு நிகராக இருக்கிற ஆவின் பால், பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாக இருந்ததுஎன்று தமிழக தாய்மார்களிடமிருந்து எடப்பாடியார் பாராட்டை பெற்றார்.
கடந்த அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் பால் தட்டுப்பாடு இல்லை, இன்றைக்கு மக்கள் குடிப்பதற்கு பால் இல்லாத ஒரு அவல நிலை திறனற்ற திமுக ஆட்சியால் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்திட வேண்டும் என்று இந்த மக்கள் விரோத அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் பால்வளத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்ந்த கோரி, இன்று முதல் ஆவினுக்கு பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.
பராமரிப்பு செலவு அதிகரித்து இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், ஆவின் மூலமாக கொள்வது செய்யப்படும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 51 ரூயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், கறவை மாடுகளுக்கு ஆவின்நிறுவனம் சார்பில் இலவச காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும், கிராம சங்க பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ பார்முலாவை அமல் படுத்த வேண்டும் என்றும், கால்நடை தீவனத்திற்கு 50 சகவீத மானியத்தை வழங்க வேண்டும் என்று இப்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாண்டுகளில், பால் தட்டுப்பாடு என்றால் என்ன என்ற நிலை இருந்தது. தற்போது மாறி , இன்றைக்கு மக்கள் குடிப்பதற்கு பால் இல்லாத ஒரு அவல நிலையை, இந்த நிர்வாக திறனற்ற திமுக ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தாய்ப்பாலுக்கு நிகராக இருக்கிற ஆவின் பால், பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாக இருந்தது என்று தமிழக தாய்மார்களிடமிருந்து எடப்பாடியார் பாராட்டை பெற்றார்.
மேலும் அம்மாவின் ஆட்சியில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஆவின் பால் நிறுவனமும், பால் கூட்டுறவு சங்கங்களும், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியான விலையிலே, மூன்று வகையான தரமான பால்களை வழங்கி வந்ததை நாம் அறிவோம்.
அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு உடனுக்குடன், அவர்கள் வழங்கிய பாலுக்கான விலையை கொடுத்து வந்தது.
இதனால் அம்மாவின் ஆட்சிக்காலத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சரி, 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் நிறுவனத்துடன் போட்டி போட்டு கொண்டு, குறைந்த விலைக்கு தரமான பாலை விற்பனை செய்ய முடியாத நிலையிலே, ஆவின் பால் தான் தமிழ்நாட்டு மக்களுடைய ஒரே வரப்பிரசாதமாக அம்மாவின் ஆட்சியில் இருந்தது.
ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் பாலின் தரத்தை குறைத்தும், அதிக அளவில் இருக்கும் பாலுக்கு 12 ரூபாயாக உயர்த்தியும், இரண்டாம் ரகமாக விற்கும் பாலில் கொழுப்பு சத்தை ஒரு சதவீதம் குறைத்ததும், ஆவின் பொருள்களின் தயிர் ,மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருள்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயனடைய வழிவகை செய்ததும், 50 சதவீதத்திற்கு மேல் முகவர்களுக்கு பால் சப்ளையை குறைத்ததும், முக்கியமாக பால் உற்பத்தியாளர் இருந்து பால் கொள்முதலை குறைத்தால், இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய பாலை விற்க தொடங்கி இருக்கிறார்கள்.இது போன்ற காரணங்களால் தமிழக முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதற்கு பால் உற்பத்தியாளர் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஆகவே இந்த நிலை தொடர்ந்தால், பச்சைக் குழந்தைகள் குடிப்பதற்கு கூட, பால் இல்லாத நிலை ஏற்படும் என்பதை அரசு அறிந்திருக்கிறதா? என்பது தான் இன்றைய வேதனையான கேள்வியாக இருக்கிறது.
ஆவின் பால் தட்டுபாட்டால் மக்கள் கவலையில், துயரத்தில், வேதனையில் இருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்,’’
என்று அந்த அறிக்கையில் உதயக்குமார் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்