crime: மகள்கள், போலீஸ் அதிகாரி உட்பட 5 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!
Nov 24, 2022, 09:47 PM IST
திரிபுராவில் தனது இரண்டு மகள்கள், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரை கொடூரமாக தாக்கி கொலை செய்த நபருக்கு, திரிபுராவின் கோவாய் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திரிபுராவின் வடக்கு ராம்சந்திரகாட் பகுதியில் வசித்து வந்தவர் பிரதீப் டெப்ராய் (40). கூலித் தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நள்ளிரவில் திடீரென வன்முறையில் ஈடுபட்டு தனது இரு மகள்கள் அதிதி மற்றும் மந்திராவை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். அப்போது அவரது அண்ணன் அம்லேஷ் டெப்ராய் சம்பவ இடத்துக்கு வந்தபோது, அவரும் அந்த இடத்திலேயே டெப்ராயால் கொல்லப்பட்டார்.
3 குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்த பிறகும் ஆத்திரம் அடங்காத டெப்ராய், சாலையில் அந்த வழியாகச் சென்றவர்களையும் கொடூரமாக தாக்கத் தொடங்கி உள்ளார். இதில், அவ்வழியாக ரிக்சாவில் பயணித்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கோவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ண தாஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து கோவாய் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சத்யஜித் மாலிக், பெரும் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டெப்ராயை கைது செய்ய முயன்றார். ஆனால், எதற்கும் அஞ்சாத டெப்ராய் போலீஸ் அதிகாரி என்றும் பாராமல் மாலிக்கையும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் அகர்தலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே ஒருவழியாக போலீஸார் கொடூர கொலையாளியை கைது செய்தனர்.
இந்த கொடூர கொலைகள் குறித்து போலீசார் துரித விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை கோவாய் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இருப்பினும், சம்பவத்தன்று இரவு அந்த குற்றவாளி எதற்காக திடீரென வன்முறையில் ஈடுபட்டார் என்பதை அறிய முடியவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சங்கரி தாஸ் நேற்று தீர்ப்பளித்துள்ளார். தனது இரு மகள்கள், அண்ணன், ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு வழிப்போக்கர் என 5 பேரைக் கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட டெப்ராயுக்கு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் விகாஸ் தேப் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் டெப்ராய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதலில் தெரியவந்தது. ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என விசாரணைக்கு பின் மருத்துவர்கள் சான்றளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கை விரைந்து விசாரித்து ஓராண்டுக்குள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்