Sabarimala Ayyappa Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
Sep 16, 2022, 02:12 PM IST
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (செப்.16) மாலை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்: புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம். இவை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி ஒவ்வொரு மாதம் முதல் நாளில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
அந்தவகையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
இந்தநாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைக்கு பின் மதியம் 1 மணியளவில் நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாரதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்றிரவு அரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும் .
டாபிக்ஸ்