மகாராஷ்டிராவில் புதிய சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு
Jul 03, 2022, 02:00 PM IST
மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட பா.ஜ.க-வின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகளைப் பெற்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பெரும் அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து சிவசேனை அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்lடிரா சட்டப்பேரவைத் தலைவர் பதவி ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில், அந்தப் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சிவசேனை எம்எல்ஏ ராஜன் சால்வி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் போட்டியிட்டார். இதில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிவசேனையின் ராஜன் சால்வி 107 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. . நாளைய கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே அவரது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில், இன்று சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பாஜக கூட்டணி முதல் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது.
யார் இந்த ராகுல் நர்வேகர்?
வழக்கறிஞரான ராகுல் நர்வேகர், ஆரம்ப காலத்தில் சிவசேனையின் இளைஞர் பிரிவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி 2014ல் தேசியவாத காங்கிரஸில் சேர்ந்தார். ராகுல் நர்வேகர் 2014 மக்களவைத் தேர்தலில் மாவல் தொகுதியில் போட்டியிட்டு சிவசேனையின் ஸ்ரீரங் அப்பா பார்னேவிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2019ல் பாஜகவில் இணைந்தார். ராகுல் நர்வேகர் தற்போது மும்பையின் கொலாபா தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இவர் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ஆவார்.
டாபிக்ஸ்