TN Assembly: ’நந்தன் கால்வாய் திட்டம்! பணம் பத்தல!’ துரைமுருகன் பதில்!
”நிலம் கையகப்படுத்த நிதி கேட்டுள்ளோம். 309 கோடி இத்திட்டத்திற்கு தேவை என அறிக்கை கொடுத்துள்ளார்கள். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நானும் நினைக்கிறேன்”
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி, முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மறைந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
பின்னர் தொடங்கிய கேள்வி நேரத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மிருகண்டாநதி அணை 10 ஆண்டுகளாக பராமரிப்புகள் இன்றி சிதலமடைந்துள்ளது. கலைஞர் அறிவித்த அணையை கலைஞர் நூற்றாண்டு காலத்தில் சீரமைத்து தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மிருகண்டாநதி அணையை சீரமைக்க உலக வங்கி நிதி உடன் பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வளத்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்புக்கு வேண்டிய பாதுகாப்புகளை செய்ய வேண்டிய விவரங்களும் அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
நந்தன் கால்வாய் திட்டம் நீண்ட நெடுங்காலமாக கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு திட்டம். நான் பொதுப்பணி துறை அமைச்சராக 1989ஆம் ஆண்டில் பணியாற்றிய போது கலைஞர் அவர்கள் சொன்ன திட்டம். 2018ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கு 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அது போதவில்லை. நிலம் கையகப்படுத்த நிதி கேட்டுள்ளோம். 309 கோடி இத்திட்டத்திற்கு தேவை என அறிக்கை கொடுத்துள்ளார்கள். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நானும் நினைக்கிறேன். இந்தாண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் நிதி தருவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.