MGR Memorial Day: ‘மன்னாதி மன்னன் எம்ஜிஆர் வகுத்து தந்த பாதையின் வழிநடப்போம்’ - எடப்பாடி பழனிசாமி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளை ஒட்டி, அதிமுக நிர்வாகிகள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன், செங்கோட்டையன் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது பெரும்பாலானோர் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் கருப்புச் சட்டை அணிந்து துக்கத்தை அனுசரித்தனர்.
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் வீரிய விருட்சத்தின் விலை மதிக்க முடியாத விதை, தமிழகத்தில் இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கிட அயராது பாடுபட்ட பாரத ரத்னா, ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித்தலைவர், சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகர், என்றும் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் #மன்னாதிமன்னன்_MGR , புரட்சித்தலைவர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்’' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், திரைப்பட நடிகர் மன்சூர் அலிகானும் தனிப்பட்ட முறையில் வந்து எம்ஜிஆர் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9