Dr Rajendra Prasad: இந்தியாவின் முதல் ஜனாதிபதி நினைவு நாள் இன்று - சிறப்பு பகிர்வு!
Dr Rajendra Prasad death Anniversary: இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 61-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். தொண்டர்கள் இவரை ‘பாபுஜி’ என்று அன்புடன் அழைத்தனர். டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இன்று வளர்ந்து நிற்கும் இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் . அவரது நினைவு தினம் இன்று (பிப் 28).
பிறப்பு
கடந்த 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாவீர சாகி, தாய் கமலேசுவரி தேவி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கினார். 5 வயதில் ஒரு மவுல்வியிடம் பாரசீக மொழி கற்றார். சாப்ரா மாவட்டத்தில் தொடக்கக் கல்வியை முடித்தார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார்.
கல்வி பணி
கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தார். பணிபுரியும் போதே சட்டக்கல்லூரியில் மேற்படிப்பு படித்து முதல் மாணவனாக தங்க பதக்கம் பெற்று சிறந்து விளங்கியவர் ராஜேந்திர பிரசாத். சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அரசியல்
காந்தியின் அகிம்சை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தனது வழக்கறிஞர் தொழிலை துறந்தார். தரையைத் துடைப்பது, கழிவறையைக் சுத்தம் செய்வது, பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். 1934 ஆம் ஆண்டு பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ ரூ.38 லட்சம் நிதி திரட்டினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
வரலாற்று சாதனை
1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராஜேந்திர பிரசாத் . 1962 வரை சுமார் 12 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். இந்திய குடியரசுத் தலைவர்களில் 2-வது முறையாக அந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றவர்.
மறைவு
இந்தியக் குடியரசை திறம்படவும் உறுதியாகவும் வழிநடத்தியவர் என்று போற்றப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார். அவரது நினைவு நாளான இன்று அந்த உயரிய மனிதரை அவரை வணங்குவோம்..ஜெய்ஹிந்த்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்