Rajamagal Movie Review: ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’.. ராஜாமகள் படம் எப்படி?
பல வருட காலமாக சினிமாவில் இருந்ததற்கான அடையாளமாக முதிர்ச்சியான நடிப்பை முருகதாஸ் வெளிப்படுத்தி இருந்தாலும் சில இடங்களில் அவர் திணறுவதை மறுக்க முடியவில்லை
ஆடுகளம் முருகதாஸ், பக்ஸ், ஃப்ராங்க்ளின், பிரதிக்ஷா ஆகியோரது நடிப்பில் வருகிற மார்ச் 17 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘ராஜா மகள்’. இந்த படத்தை இயக்குநர் ஹென்றி இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளராக ஷங்கர் ரங்கராஜன் பணியாற்றி இருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கதையின் கரு
மொபைல் பழுது பார்க்கும் கடை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் சுந்தரத்தின் ஒரே மகள் பிரதிக்ஷா. கடை விட்டால் மகள், மகள் விட்டால் கடை என மகளின் மீது அன்பை பொழிந்து வளர்க்கிறான் சுந்தரம்.
அப்பா எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என்று நினைப்பில் இருக்கும் பிரதிஷாவிற்கு பள்ளிநண்பனின் வாயிலாக சொந்த வீட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை துளிர்விடுகிறது. அதை எதேச்சையாக அப்பாவிடம் சொல்ல சுந்தரமும் அதற்கென்ன வாங்கி விடலாம் என நம்பிக்கை அளித்து விடுகிறார்.
காலப்போக்கில் மகள் அதனை மறந்து விடுவாள் என்று சுந்தரம் நினைக்க, அதற்கு நேர்மாறாக சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இறுதியில் சுந்தரம் சொந்த வீடு வாங்கினானா? மகளின் ஆசை என்ன ஆனது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலே படத்தின் மீதிக்கதை!
படத்தில் ஆடுகளம் முருகதாஸ்தான் கதாநாயகன் என்றாலும் , படத்தை உண்மையில் தாங்கி நிற்பது என்னவோ பேபி பிரதிஷாதான். அவ்வளவு சுட்டி. அப்பாவுடன் பாசத்தை பொழிவது, சகமாணவனின் பணக்கார வாழ்க்கையை பார்த்து தாழ்வுமனப்பான்மையில் குறுகிப்போவது, வீடு வாங்க வேண்டுமென பிடிவாதமாக இருப்பது என பல இடங்களில் நடிப்பில் வாவ் சொல்ல வைக்கிறார்.
நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு குழந்தாய். சுந்தரமாக முருகதாஸ். பல வருட காலமாக சினிமாவில் இருந்ததற்கான அடையாளமாக முதிர்ச்சியான நடிப்பு அவரிடத்தில் இருந்து வெளிப்பட்டாலும் சில இடங்களில் அவர் திணறுவதை மறுக்க முடியவில்லை.
இவரது மனைவி வசந்தியாக வரும் ஃப்ராங்க்ளின் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். சுந்தரத்தின் நண்பனாக பக்ஸ். சில காட்சிகள்தான் என்றாலும் மனதில் நின்று விடுகிறார்.
இயக்குநர் ஹென்றி மிகவும் சிம்பிளான கதையை எழுதி போராடிக்காமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார். பல இடங்களில் கிளிஷேவான காட்சிகள் இருந்தாலும் கூட, அவை அனைத்தும் பிரதிஷாவின் சுட்டித்தனமான நடிப்பு மறக்கடிக்க செய்து விடுகிறது.
கிளைமேக்சில் சுந்தரம் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க, இயக்குநர் சொல்ல நினைத்து வைத்திருக்கும் முடிவு அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை.
ஒன்று அதில் இன்னும் கொஞ்சம் ட்ராமாவை புகுத்தி இருக்க வேண்டும். இல்லை வேறுவகையான முடிவை யோசித்து இருக்க வேண்டும். அதை ஒன்றைத்தவிர படம் நிச்சயம் எந்த இடத்திலும் நம்மை பெரிதாக ஏமாற்றவில்லை. ராஜாமகள்.. நிச்சயம் ஏமாற்றாது!
டாபிக்ஸ்