Tirupati: கோடை விடுமுறை எதிரொலி ..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
Tirupati Temple: கோடை விடுமுறையால் நாடு முழுவதிலுமுள்ள பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்து வருவதால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தால் திருப்பதி கோயில் எப்போதும் நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கிறது. குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
இந்நிலையில், தற்போது கோடை விடுமுறையால் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க திருப்பதி தேவஸ்தானம் புதிய முறையை கடைபிடிக்க உள்ளது. திருப்பதி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் நடைபெற்ற கோடைகால ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, திருப்பதியில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி தர்மாரெட்டி கூறுகையில், தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் பக்தர்கள் கூட்டம் திருமலையில் அதிகரித்து விட்டது. இந்த நிலை வரும் ஜூலை மாதம் இறுதி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும். தேவைப்பட்டால் திருப்பதியில் உள்ள மேலும் சில கோயில்களில் பணியாற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக திருமலைக்கு வந்து பணியாற்றிட வேண்டும். ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரிகள், முக்கியமாக முடி காணிக்கை செலுத்தும் இடம், அன்ன தான மையம், லட்டு பிரசாத விநியோக மையங்களில் அடிக்கடி சென்று மேற்பார்வையிடுதல் அவசியம்.
கூடுதல் ஸ்ரீவாரி சேவகர்களை நியமனம் செய்வது அவசியம். கோயிலுக்குள் உள்ள வெள்ளி வாசலுக்கும், தங்க வாசலுக்கும் இடையேதான் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஆகம வல்லுநர்கள், வாஸ்து நிபுணர்கள் கலந்தாலோசித்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கோடையில் சாமானிய பக்தர்கள் அவதிப்படக் கூடாது. சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். போலீஸார் போக்குவரத்து கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்