FIFA world cup 2022: "பீர் வேண்டும்..." கோரஸாக கத்திய ஈகுவேடார் ரசிகர்கள்
Nov 21, 2022, 03:18 PM IST
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் போட்டி நடைபெறும் 8 மைதானங்களிலும் பீர் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆல்கஹால் இல்லாத பீர் விற்பனைக்கு தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலகக் கோப்பை தொடக்க போட்டியான கத்தார் - ஈகுவேடார் இடையிலான போட்டிக்கு இடையே ஈகுவேடார் நாட்டு ரசிகர்கள் திடீரென பீர் வேண்டும் என கோரஸாக ஸ்பானிய மொழியில் கத்தியுள்ளார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பழமைவாதம் மிக்க நாடான கத்தாரில் ஆல்கஹால் கலந்த போதை பானங்கள் விற்பனையானது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களிலும் போதை பானங்களான விஸ்கி, சாம்பெயின், ஒயின் போன்றவற்றின் விற்பனை மைதானத்தில் தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை பிபாவும் உறுதி செய்தது. மூன்று மணி நேரம் பீர் இல்லாமல் அனைவராலும் உயிர் வாழ முடியும் என இந்த விவகாரம் தொடர்பாக பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ தெரிவித்தார். இருப்பினும் ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி, விருந்தோம்பல் பகுதியில் ஆல்கஹால் இல்லாத பீர், போதை தரும் பீர் விற்பனை செய்யப்பட்டது. இதை ரசிகர்கள் வாங்கி உற்சாகத்துடன் சென்ற காட்சிகளையும் பார்க்க முடிந்தது.