Social Media Monitor Team: சமூக ஊடகங்களை கண்காணிக்க சிறப்பு குழு - டிஜிபி
Sep 06, 2022, 08:17 AM IST
இணைய வழி குற்றங்களை கண்டுபிடிக்க 203 காவலர்கள் அடங்கிய சமூக ஊடகக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்காக 203 காவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றங்களை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை கண்காணிக்கும் குழு ஒன்றை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அமைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் Youtube, Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்கள் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வதந்திகளாக பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களை கண்டுபிடிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழு தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு இதில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழுவைப் பொறுத்தவரை சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும்.
குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்வதற்கும் இந்த குழு செயல்படும். இதனிடையே சாதி மத அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும் இந்த குழு செயல்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்