ரயிலில் செல்லும்போது செல்போனில் பேசுபவரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து என்ன?
Mar 21, 2023, 08:07 AM IST
Cellphone Snatching : ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்போனை சிறுவன் பறித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பயணியின் கை, வலது கால் துண்டானது. செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 15 வயது சிறுவனை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (40). இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருக்கிறார். இந்த நிலையில் கடைக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்காக சென்னை வந்தார். அண்ணா சாலை ரிச்சி தெருவில் உள்ள மொத்தக்கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் அவர் தனது நண்பருடன் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் வாணியம்பாடிக்கு புறப்பட்டார்.
இந்த ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்துல்கரீம் படியில் நின்றுகொண்டு செல்போன் பேசியதாக தெரிகிறது. அப்போது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் அப்துல்கரீம் கையில் வைத்திருந்த செல்போனை சட்ரென்று பறித்துள்ளார். இதில் நிலை தடுமாறிய அப்துல்கரீம் ரயிலில் இருந்து கீழே விழுந்தார். தண்டவாளத்தின் நடுவே விழுந்ததால் ரயிலில் சிக்கினார். இதில் அவரது இடது கை, வலது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில் அப்துல்கரீ மிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் சென்னை சென்டிரல் ரயில்வே போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில், அந்தச்சிறுவன் அப்துல் கரீமிடம் பறித்த செல்போனை பாரிமுனைக்கு சென்று ரூ.1,700 விற்று, அதில் ஆட்டோ பயணத்திற்கு ரூ.500 செலவு செய்ததும், ரூ.500-க்கு மது வாங்கி அருந்தியதும் தெரியவந்தது. பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப் பட்டு கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
இதுபோல் ரயிலில் பயணம் செய்யும்போது செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் பொது இடங்களில் பொதுமக்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நாம் செல்போன் உபயோகத்தில் மும்முரமாக ஈடுபடும்போது, இதுபோன்ற திருடர்கள் நம்மை கூர்மையாக நோட்மிட்டு நாம் அசந்த நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அதில் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தான் என்பதால் பொதுமக்கள் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். மேலும் சென்னையில் சிறுவர்கள் இதுபோல் திருடுவது அதிகரித்துவிட்டது என போலீசார் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்