ராமநாதபுரம் உள்ளிட்ட 5 நகரங்களுக்கு விரைவில் மாநகராட்சி அந்தஸ்து-நேரு அறிவிப்பு
Mar 30, 2023, 05:12 PM IST
கடந்த ஆண்டில் 6 நகராட்சிகள் மாநகராட்சியாகவும் 28 பேரூராட்சிகள் நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது- கே.என்.நேரு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் பேரவையில் நாள்தோறும் நடந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது இந்த விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கடந்த ஆண்டில் 6 நகராட்சிகள் மாநகராட்சியாகவும் 28 பேரூராட்சிகள் நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், பெருந்துறை, அவினாசி, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
சென்னை மாநகரில் முந்தய அரசால் 830 எம்.எல்.டி குடிநீர் அளவு தற்போது ஆயிரத்து 30 எம்.எல்.டியாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
நெம்மேலிக்கு அருகில் உள்ள பேரூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.