New Law To Provide Reservation : தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு
Nov 08, 2022, 12:19 PM IST
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவை வலிமையாக தயாரித்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த குழுவில் உச்ச நீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன், சட்ட விவகாரங்கள் துறையின் அரசு செயலாளர் கார்த்திகேயன், சட்ட இயற்றுதல் துறையின் செயலாளர் கோபி ரவிக்குமார், சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் முனைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் வழக்கறிஞர் விஎன்வி நிறைமதி மூத்த வழக்கறிஞர் டாக்டர்.ரவிவர்மகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
தமிழகத்தில் அரசுத்துறை பதவி உயர்வில் வழங்கப்பட்ட ஓபிசி இட ஒதுக்கீடு செல்லாது என 02.09.2020 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சமூகநீதிக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அப்போதே வலியுறுத்தியிருந்தேன்! எனது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதும், சமூகநீதி சார்ந்த வழக்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார் வல்லுனர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவை, நீதிமன்ற ஆய்வுகளை தாங்கும் வகையில் வலிமையாக தயாரித்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.