கடற்பரப்பில் ஆயில் பைப்லைன் செயல்பாடு நிறுத்த கோரிக்கை - அரசு பதிலளிக்க உத்தரவு
Mar 25, 2023, 06:35 AM IST
MHC Madurai Bench: கடற்பரப்பில் எண்ணெய் கசிவை தடுத்து கடல் வாழ் பல்லுயிர் காப்பகத்தை பாதுகாக்கவும், பட்டினச்சேரி கடற்பரப்பில் உள்ள ஆயில் பைப் லைன் செயல்பாடுகளை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு 1,076 கி.மீ தொலைவுக்கு இந்தியாவிலேயே நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு மட்டும் 4 கடல் வாழ் பல்லுயிர் காப்பகம் அமைந்துள்ளது.
கடற்பரப்பில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடல் வளம் பாதிக்கிறது. கடற்பரப்பில் ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள், இயற்கை வளங்கள் பாதிக்கின்றன.
கடந்த 2ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. குறிப்பாக பட்டினம்சேரி மீனவ கிராமம் பெரும்பாலும் பாதித்துள்ளது.
எனவே, நிபுணர் குழு அமைத்து இந்த கிராமத்தை ஆய்வு செய்து பாதிப்பின் அளவை மதிப்பீடு செய்யுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இடைக்கால நிவாரணமும், சேதமடைந்த சுற்றுச்சூழலை சரி செய்யவும், பட்டினச்சேரி கடற்பரப்பின் மீது 9 கிமீ தொலைவுக்கு உள்ள ஆயில் பைப் லைன் செயல்பாடுகளை நிறுத்தவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுநீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மீன்வளத்துறை செயலர்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
டாபிக்ஸ்