’மின்சார வாரியத்தில் 908 கோடி ஊழல்’ அறப்போர் இயக்க புகாருக்கு FIR பதிவு
Mar 03, 2023, 08:16 PM IST
2011 முதல் 2016 வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளதால் 10 பேர் மீது இந்த வாரம் 27/2/2023 அன்று FIR பதிவு
மின்சார வாரிய நிலக்கரி போக்குவரத்து ஊழல் மீது 908 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் மின்சார வாரிய பொது ஊழியர்களும் கூட்டு சதி செய்து மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவந்த ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட், துறைமுகத்தில் வரியாக கட்டிய பணத்தின் உண்மையான பில்களை சமர்ப்பிர்க்காமல் போலியாக அதைவிட பல மடங்கு பணத்தை பெற்று மோசடி ஊழல் செய்தனர்.
இந்த ஊழல் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி
இதில் 2011 முதல் 2016 வரை 1028 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித்து இருந்தது. இதன் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 2011 முதல் 2016 வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளது என்று கூறி இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பு பொறியாளர்கள் செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மொத்தம் 10 பேர் மீது இந்த வாரம் 27/2/2023 அன்று FIR பதிந்துள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபப்ட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இதன் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.