போலி டாக்டர் பட்ட விவகாரம்: ஹரீஷ் முன் ஜாமின் மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
Mar 04, 2023, 12:40 PM IST
Fake Doctorate Certificates Award: ஹரீஸ் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தால் நிராகரிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து போலி கௌரவ டாக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் ஹரிஷின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த பிப். 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த டாக்டர் பட்டம் போலியானவை என தெரிய வந்ததை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, நடன இயக்குநர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர் கோகுல் ராஜ் உள்ளிட்ட சில திரைப்பிரபலங்களை முன்னிறுத்தி 50க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் வழங்கி உள்ளார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் என்பதனை பெரிதாக அச்சிட்டிருந்தனர்.
அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக்கூடிய அரசு முத்திரையும் சட்ட விரோதமாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்தான் தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் நம்பினர். இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு வராமல் வீட்டிலேயே இருந்த நடிகர் வடிவேலுவுக்கு வீடு தேடி சென்று டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர்.
வடிவேலுவிடம் தங்கள் கவுன்சில் சார்பில் மதிப்புறு முனைவர் என்கிற கவுரவ டாக்டர் பட்டம் தருவதாக கூறி அந்த போலி ஆவணத்தை கொடுக்கும் வீடியோவும் வெளியானது. யூடியூபில் பிரபலமான கோபி, சுதாகரை அழைத்து அவர்களுக்கும் ஆளுக்கொரு அவார்டு வழங்கினர்.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றி இந்த விழாவை நடத்தி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன்' என்று ஹரிஷ் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர் புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஹரீஷ்சை தேடி வருகின்றனர்
இதற்கிடையில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஹரீஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டாபிக்ஸ்