September 28 Tamil News Updates: சிங்கப்பூர் செல்ல லாலு பிரசாத் யாதவுக்கு அனுமதி
Sep 28, 2022, 03:00 PM IST
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லக் கோரிய லாலு பிரசாத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது. இதனை சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் விசாரித்தார். பின்னர், வரும் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை லாலு பிரசாத் யாதவ் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல லாலு பிரசாத் யாதவுக்கு அனுமதி!
பீகார் முன்னாள் முதல்வர், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லக் கோரிய லாலு பிரசாத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது. இதனை சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் விசாரித்தார். பின்னர், வரும் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை லாலு பிரசாத் யாதவ் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,000-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ. 4,625-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று 15 மாவட்டங்களில் கனமழை
ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
லக்கிம்பூரில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து - 8 பேர் பலி
லக்கிம்பூர் கேரியில் லக்னோ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப உத்தரவு!
ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் விற்பனையாளர்,கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விற்பனையாளர்கள் 12 ஆம் பகுப்பு அல்லது அதற்கு இணையான கல்விதகுதி,கட்டுனர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு இன்புளூயன்சா காய்ச்சல்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகாா்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்குப்பதிவு செய்யக்கோரி குறவர் சமுதாய மக்கள் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
புழல் சிறையில் இருந்து 22 ஆயுள் கைதிகள் விடுதலை!
அண்ணா பிறந்தநாளை ஒட்டி,புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 24ஆம் தேதி முதற்கட்டமாக 15பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று 21 ஆண் கைதிகள் ஒரு பெண் கைதி உள்பட 22 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!
சென்னை தாம்பரம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி ரவுடி சச்சினை காவல் துறையினர் கைது செய்தனர்.
பூந்தண்டலத்தில் பதுங்கி இருந்த ரவுடி சச்சினை பிடிக்க முயன்ற போது காவலர் பாஸ்கரன் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயற்சித்தால் துப்பாக்கியால் காலில் சுட்டு மடக்கி பிடித்தது போலீஸ். சச்சின் மீது கொலை வழக்குகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.