September 22 Tamil News Updates: திமுக முக்கிய பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல்!
Sep 22, 2022, 04:24 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளின் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
திமுக முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!
திமுக கட்சியின் மாவட்டச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக்கழக உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு 3000 ஓய்வூதியம்
தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த 60 வயதிற்கும் மேற்பட்ட பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ஆயிரத்திலிருந்து 3000 ஆக வழங்கப்படும் என ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் ஆஜராக சிபிசிஐடி சம்மன்
அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, இன்று முதல் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவு, 7.5 சதவீத ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு நேரடியாகவும், பொது பிரிவினருக்கு ஆன்லைனிலும், 'கவுன்சிலிங்' நடைபெறும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி மனுக்கள் விசாரணை!
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
கட்டணம் செலுத்த கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதி தொடங்கியது. முதல் சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான காலஅவகாசம் இன்றுடன் (செப்.22) நிறைவு பெறுகிறது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகை
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக இன்று காலை தமிழகம் வருகிறார். மதுரை வரும் அவர் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
சிவகாசியில் இன்று மின்தடை !
சிவகாசி கோட்டத்துக்குட்பட்ட பாரைப்பட்டி, சிவகாசி நகரம், நாரணாபுரம், அப்பயநாயக்கன்பட்டி, நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (செப் 22) நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
சிக்கமகளூரு நகரில் மதுபானங்கள் விற்க தடை
சிக்கமகளூரு போலராமேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி நகரசபை சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. போலராமேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை பசவனஹள்ளியில் உள்ள குளத்தில் கரைக்க இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிக்கமகளூரு நகரில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மதுபானங்கள் விற்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.