Accidental Farmer And Co Review: கஞ்சா கை கொடுத்ததா? காமெடி கை கடித்ததா?
Mar 13, 2023, 05:56 AM IST
Sony Liv: வைபவ் கிராம அப்பாவி இளைஞராக பொருந்துகிறார். அவரது எதார்த்தத்துடன் கதாபாத்திரம் பொருந்தி போவதும், அவருக்கு பலம்.
‘ஆக்சிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ’ என்கிற ஆங்கில வார்த்தையில், தமிழில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ். Sony LIV OTT தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில், வைபவ் ரெட்டி , ரம்யா பாண்டியன், வினோதினி வைத்தியநாதன், படவா கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மண்மதபுரம் என்கிற கிராமத்தில், சோம்பேறியாக இருக்கும் வைபவ், எந்த வேலைக்கும் செல்லாமல் காலத்தை கடத்துபவர். திடீரென அவரது தாத்தா இறந்து போக, அவரது 8 ஏக்கர் தரிசு நிலம் உயில் மூலம், வைபவிற்கு கிடைக்கிறது.
உலகின் மகிழ்ச்சியான நாடான ஃபின்லாந்து போய் செல்டில் ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் வைபவ், உள்ளூர் கந்துவட்டிக்காரரிடம் 20 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்க முயற்சிக்கிறார். குறைந்த விலை தருவதாக கந்துவட்டிக்காரர் கூற, 3 மாதத்தில் நிலத்தை விளைவித்து காட்டினால், கேட்டத் தொகை தருவதாக கூறுகிறார்.
ரம்யா பாண்டியன் மீது கொண்ட காதல் காரணமாக, அவரையும் ஃபின்லாந்து அழைத்துச் செல்ல ரூ.20 லட்சம் கட்டாயம் தேவைப்படுவதால், அது வரை சோம்பேறியாக இருந்த வைபவ், விவசாயம் செய்ய முன்வருகிறார். உள்ளூரில் உள்ள ஒரு முதிய உறவினர் ஒருவரின் பல்வேறு யோசனையில், நெல், கோதுமை என எத்தனையோ விவசாயத்தை மேற்கொள்ள முயற்சிகள் எடுத்து, அடுத்தடுத்த நாளில் அது தோல்வியை தழுவ, விரக்தியடைந்த வைபவ், தனது தாத்தா சேர்த்து வைத்த பழைய ரூபாய் நோட்டுகளை தன் நிலத்தில் வைத்து எரிக்கிறார்.
அந்த தீ அருகில் இருந்த செடி மீது பட்டு புகை வர, அந்த புகையை சுவாசித்த வைபவ், போதை நிலைக்கு போகிறார். அது கஞ்சா என்பது தெரியாமல் மூலிகை செடி என நினைத்து, உள்ளூர் டுபாக்கூர் இயற்கை மருத்துவர் ரமேஷ் உடன் இணைந்து, கஞ்சா விவசாயம் மேற்கொள்கின்றனர்.
கஞ்சா என்று தெரியாமல் நிறைய விளைவித்து, அதை ‘ரதி மூலிகை’ என்கிற பெயரில் மருந்தாக விற்பனை செய்யத் தொடங்குகின்றனர். பட்டி தொட்டியெல்லாம் ரதி மருந்து பேமஸ் ஆகிறது. வெள்ளந்தியாக அவர்கள் செய்த விவசாயம், நல்ல வருமானத்தையும், மக்கள் கூட்டத்தையும் உருவாக்குகிறது.
போதை தடுப்பு பிரிவு பெண் அதிகாரி ஒருவருக்கு அந்த மருந்து கஞ்சா என்பது தெரியவர, இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பதாக நினைத்து, ‘அன்டர் கிரவுண்ட் ஆபரேசனாக’ அந்த கிராமத்திற்குள் நுழைகிறார் பெண் அதிகாரி. இதற்கிடையில் போதை கடத்தல் குரூப் ஒன்றை தேடி போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வலை விரிக்கின்றனர்.
கஞ்சா விவசாயம் செய்த வைபவ் அன் கோ.,வின் நிலை என்ன ஆனது? உளவு பார்க்க வந்த பெண் அதிகாரி கண்டுபிடித்தாரா? போதை பொருள் கும்பலுக்கும் வைபவ் அன் கோ., டீமிற்கும் என்ன மாதிரி இணைப்பை ஏற்பட்டது? என்பது தான் ‘ஆக்சிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ’ சீரிஸின் கதை.
படம் கொஞ்சம் கூட சீரியஸ் இல்லாத, முழு நீள காமெடி களம். கிராம மக்களின் வெள்ளந்தி தனத்தை காட்டிய அதே நேரத்தில், ஏதார்த்தத்திற்கு அப்பாற் பட்ட வகையில் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வைபவ்-ரம்யா பாண்டியன் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக இருந்தாலும், விவாகரத்திற்கு காத்திருக்கும் ரம்யா பாண்டியன், எந்நேரமும் பளிச்சென இருப்பதும், இரவில் கூட முழு மேக்கப்போடு வருவதும் செயற்கை தனம். இப்படி பல கதாபாத்திரங்கள் லாஜிக் மிஸ்.
வைபவ் கிராம அப்பாவி இளைஞராக பொருந்துகிறார். அவரது எதார்த்தத்துடன் கதாபாத்திரம் பொருந்தி போவதும், அவருக்கு பலம். சுகன் ஜெய் இயக்கத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் அதை முழு காமெடியில் நிரப்ப முயற்சித்திருக்கிறார்.
வகு மழன் இசையில் பின்னணி கச்சிதமாக உள்ளது. சதீஷ் முருகன் கேமரா, இரவு, பகல் என எல்லாவற்றையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். நிரஞ்சன் ஆண்டனியின் எட்டிட்டிங், முதல் இரண்டு எபிசோடுகளில் இன்னும் நறுக்கியிருக்கலாம். கொஞ்சம் ஸ்லோ, நிறைய லாஜிக் மிஸ், இவற்றை தவிர்த்திருந்தால் இன்னும் கூட சிறப்பானதாக இருந்திருக்கும்.
டாபிக்ஸ்