’20 கி.மீக்கு ஒரு கடைதானா’ டாஸ்மாக் நிர்வாகத்தை விளாசிய நீதிபதிகள்
நீதிபதிகள், 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? - நீதிபதிகள் கேள்வி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் பட்டியல் சமுகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
P.வாகைகுளம் கிராமத்தை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன இங்கு பல்வேறு வகுப்பினை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேலையூர் கிராம நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த மதுபான கடை: 11910 P.வாகைகுளம் கிராமத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
இதனால், P.வாகைகுளம் கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறுவர்கள், பெண்கள் சென்று வரக்கூடிய பாதையாகவும் உள்ளது.
இந்த மதுபான கடையை அகற்றக்கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும் மதுபான கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடை 11910வை அகற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மார்க் தரப்பில், மதுபான கடை உரிய அனுமதி பெற்று செயல்படுகிறது மேலும் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த மதுபான கடையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? என கேள்வி எழுப்பி வழக்கு குறித்து உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் டாஸ்மார்க் மேலாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
டாபிக்ஸ்